Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
காஞ்சிபுரம்: அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு இன்று வெளியாக உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக, ''தர்மத்தின் நாயகரே நாளைய முதல்வரே'' என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் அ.தி.மு.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் 28ம் தேதி நடந்த அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஒருபுறம் சந்திப்பதும். அதேபோல் மறுபுறம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசிவருகிறார்கள். சிலர் அதற்கும் ஒருபடி மேலே போய் பல இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் காஞ்சிபுரம் பகுதியில் ஓ.பி.எஸ்.ஸூக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும்; தர்மத்தின் நாயகரே நாளைய முதல்வரே" என்றும் அ.தி.மு.க. தொண்டர்கள் உங்கள் பக்கம் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் ஆர்.வி ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டி உள்ளார். மேலும் போஸ்டர் ஒட்டிய பிறகு ஓ.பி.எஸ்.ஸூக்கு ஆதரவாக கோஷங்களையும் எழுப்பினர். பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் மற்றும் காஞ்சிபுரம் முக்கிய பகுதிகளில் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.